இந்தியாவில் நாளை ரமலான் நோன்பு துவக்கம்;
துபாயில் நோன்பு துவங்கியது
சென்னை:
ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது. இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது.
இன்று முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நோன்பு , ரமலான் பிறை நேற்று தென்படாத காரணத்தால், நாளை (வியாழக்கிழமை) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலையில் சஹார் வைத்து நோன்பு ஆரம்பிக்கும். அதிகாலை 4.17 மணிக்கு சஹார் நேரம் முடியும். சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நோன்பு நேரம் அதிகமாக இருக்கும். முதல் நோன்பு அதிகபட்சமாக 14 மணி நேரம் மற்றும் 43 நிமிடங்களைக் கொண்டதாக இருக்கும்.
இது படிப்படியாக நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குறைந்து கடைசி ரமலான் நோன்பு 14 மணி நேரம் மற்றும் 21 நிமிடங்களாக இருக்கும். இம்முறை ஐந்து வெள்ளிக் கிழமைகள் ரமலான் நோன்பில் இருக்க வாய்ப்புள்ளது.
அதாவது, 29 வது நோன்பு நாளான ஆகஸ்ட் 8ம் தேதி வியாழக்கிழமை ரமலான் பிறை தென்படாமல் போனால், அடுத்த நாள் வெள்ளிக்கிழமை 30வது நோன்பு நாளாக கணக்கில் கொள்ளப்படும்.
துபாய் உள்ளிட்ட வளைகுடாப் பகுதிகளில் ரமலான் நோன்பு துவங்கியது: அதே நேரத்தில் துபாய் உள்ளிட்ட வளைகுடாவின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (புதன்கிழமை) முதல் ரமலான் நோன்பு துவங்கியது.
இதனையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை துவங்கியது. துபாயில் தமிழக முஸ்லிம்கள் அதிகம் இருந்து வரும் தேரா குவைத் பள்ளி, கோட்டைப் பள்ளி, அஸ்கான் டி பிளாக் உள்ளிட்ட இடங்களிலும் சிறப்புத் தொழுகைகளில் அதிகமானோர் பங்கேற்றனர்.
தமிழக மக்கள் விரும்பி அருந்தும் நோன்புக் கஞ்சியினை துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள குவைத் பள்ளி மற்றும் இரண்டு பள்ளிகளில் ஈமான் அமைப்பு மூவாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோருக்கு தினமும் வழங்கவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளில் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி தலைமையில்
துணைப் பொதுச்செயலாளர் ஏ முஹம்மது தாஹா,
மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்
உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
0 comments