மனைவியை வெட்டிக்கொன்ற ஆட்டோ டிரைவர் கைது
மற்றொரு பெண்ணை கத்தியால் குத்தியவரும் போலீசில் சிக்கினார்
கோவையில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டிக்கொன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு பெண்ணை கத்தியால் குத்தியவரும் போலீசில் சிக்கி உள்ளார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாலிபருடன் கள்ளக்காதல்
கோவை பி.என்.புதூர் பொம்மநாயக்கனூரை சேர்ந்தவர் லூர்துராஜ் (வயது 41), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ஜோஸ்பின் சகாய ஜெயந்தி (33), இவர்களது மகன் பிரான்சிஸ் (10) அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜெயந்தி, கோவையில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். அவருக்கும் அந்த கடையில் வேலை செய்து வரும் ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் பல ஆண்களிடம் அவர் செல்போன் மூலம் பேசி வந்துள்ளார்.
தாய் வீட்டுக்கு சென்றார்
இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்ததால், அவர்கள் லூர்துராஜிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஜெயந்தி, தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது மகனுடன், அந்தப்பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் லூர்துராஜ் அங்கு சென்று தனது மனைவியை சமரசம் செய்து தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். பிரான்சிஸ் பாட்டி வீட்டில் இருந்தான்.
வெட்டிக்கொலை
நேற்று முன்தினம் காலையில் வேலைக்கு சென்ற லூர்துராஜ் இரவில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது ஜெயந்தி, செல்போனில் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அது குறித்து லூர்துராஜ் கேட்கவே, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த லூர்துராஜ் அரிவாளை எடுத்து ஜெயந்தியின் கழுத்தில் ஓங்கி வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த ஜெயந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். எனினும் ஆத்திரம் தீராத லூர்துராஜ் ஜெயந்தியின் உடலில் பலமுறை வெட்டினார்.
ஆட்டோ டிரைவர் கைது
பின்னர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவம் நடந்த இடம் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், வடவள்ளி போலீசார், ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் லூர்துராஜை கைது செய்தனர். பின்பு கொலை செய்யப்பட்ட ஜெயந்தியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து லூர்துராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
கோவை வி.கே.கே.மேனன் ரோட்டை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 45). இவருடைய மனைவி முத்து லட்சுமி (42). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். குப்புசாமிக்கு வலிப்புநோய் உள்ளதால் அவர் வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முத்துலட்சுமி கூலிவேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.
இந்த நிலையில் முத்துலட்சுமியின் நடத்தையில் குப்புசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று காலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த குப்புசாமி, கத்தியால் முத்துலட்சுமியின் கழுத்தில் குத்தினார்.
போலீஸ் விசாரணை
இதில் பலத்த காயம் ஏற்பட்ட முத்துலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் குப்புசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comments